Published : 30 May 2018 11:27 AM
Last Updated : 30 May 2018 11:27 AM

நடிகரான என்னைப் பார்த்தால் தூத்துக்குடி மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்: ரஜினி

தூத்துக்குடி கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்கள் நடிகரான என்னைப் பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (புதன்கிழமை) காலை தூத்துக்குடி செல்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினி செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, “தூத்துக்குடிக்கு நான் முதல்முறையாகச் செல்கிறேன். ஆனால் இப்படி ஒரு சூழலில் செல்வதுதான் வருத்தமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்கள் நடிகரான என்னைப் பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை கருத்து தெரிவிக்காதது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு “அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று ரஜினி பதிலளித்தார்.

தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினி, ''திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை. தமிழகத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் அரசியல் மாறவேண்டும்'' என்றார்.

முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் காயம் அடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக ரஜினி தூத்துக்குடி செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x