Published : 04 May 2018 09:36 AM
Last Updated : 04 May 2018 09:36 AM
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் புதுப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து வசித்து வந்த 279 குடும்பங்களை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மறு குடியமர்த்தும் பணி நேற்று தொடங்கியது.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி கூவம், அடையாறு ஆற்றின் கரையோரம் வசித்து வந்த குடும்பங்கள், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுப்பேட்டை பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 279 குடும்பங்களை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மறு குடியமர்த்தும் பணிகளை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நேற்று தொடங்கியது.
அதற்காக புதுப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், பயனாளிகளுக்கு தற்காலிக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெரும்பாக்கத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் பாதுகாப்பு வேண்டும்
இதுதொடர்பாக பயனாளிகள் சிலர் கூறும்போது, “நாங்கள் இப்பகுதியில் கற்றாழை சாறு, கூழ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம். பெரும்பாக்கத்தில் இருந்து இப்பகுதிக்கு வர பேருந்துக் கட்டணமாக தினமும் ரூ.160 செலவிட வேண்டி இருக்கும். மேலும், பெரும்பாக்கத்தில் ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. வேறு வழி இல்லாமல்தான் பெரும்பாக்கத்துக்கு செல்கிறோம். அதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். குற்றச் செயலில் ஈடுபடுவோரை அப்பகுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பெரும்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் 3 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட உள்ளது. சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் இக்குடும்பங்களுக்கு இடமாற்றப்படியாக தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது. மேலும், வாழ்வாதார உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
குடும்பங்களை வெளியேற்றி வரும் அதே வேளையில், அப்பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT