Last Updated : 24 May, 2018 07:39 AM

 

Published : 24 May 2018 07:39 AM
Last Updated : 24 May 2018 07:39 AM

2-வது நாளாக துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் பலி: தீ வைப்பு, நாட்டு வெடிகுண்டு வீச்சு, தடியடி சம்பவங்களால் தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு- உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக நேற்றும் வன்முறை சம்பவங்கள் நீடித்தன. வாகனங்களுக்கு தீ வைப்பு, வெடிகுண்டு வீச்சு, போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. நேற்று நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த ஏடிஜிபி தலைமையில் 5 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள னர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ரான போராட்டம் 100-வது நாளை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 19 போலீ ஸார் உள்ளிட்ட 83 பேர் காய மடைந்தனர்.

கலவரத்தில் காயமடைந்தவர் கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பிமகேந்திரனுக்கும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் கார்த்திக் (20), நேற்று முன்தினம் இரவில் உயி ரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆனது.

2-வது நாளாக கலவரம்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நேற்று அதிகாலை முதலே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிக அள வில் திரண்டனர். அவர்கள் பிணவறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை பணியிட மாறு தல் செய்ய வேண்டும். ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரட்கர் தலைமை யில் போலீஸார் வந்து, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லு மாறு எச்சரித்தனர். ஆனால், அவர்கள் மறுக்கவே லேசான தடி யடி நடத்தி விரட்டினர். மருத்துவமனையின் முன் பகுதிக்குச் சென்ற போராட்டக்காரர்கள் அங்கு நின்று முழக்கமிட்டனர். அருகேயுள்ள ராஜாஜி பூங்கா முன்பிருந்து சிலர் மருத்துவமனையை நோக்கி கற்களை வீசினர். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்த அனைவரையும் போலீஸார் தடி யடி நடத்தி விரட்டி அடித்தனர்.

வெடிகுண்டு வீச்சு

இதனால், மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தநேரத்தில் மருத்துவமனை முன்புள்ள சாலையில் ஏராளமா னோர் திரண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. அவை சாலையில் விழுந்து வெடித்துச் சிதறின. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீ ஸார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். கூட்டத் தில் இருந்தவர்கள் அண்ணா நகர், டுவிபுரம் பகுதிகளில் உள்ள குறுகிய சந்துகளில் சிதறி ஓடினர். போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று தடியடி நடத்தினர்.

துப்பாக்கிச் சூடு

அப்போது, ஒரு கும்பல் அண்ணா நகர் 6-வது தெருவில் பூட்டிக் கிடந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடியது. அங்கு விரைந்த போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். மேலும், ரப்பர் குண்டுகளை கொண்டு சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த தூத்துக்குடி மாப்பிளையூரணி ராமதாஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் காளியப்பன் (22) என்பவர் உயிரிழந்தார். இதனால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

மேலும், போலீஸார் நடத்திய ரப்பர் குண்டு துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்தனர். தடியடி யில் ஒருவர் காயமடைந்தார். இவர்கள் 8 பேரும் துத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர்.

வாகனங்கள் தீ வைப்பு

பாதுகாப்புக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் வந்த காவல்துறைக்கு சொந்த மான 2 பேருந்துகள் பிரையன்ட் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு திருமண மண்டம் முன்பு நிறுத்தப்பட்டிருந்தன. அந்த பேருந்துகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்துவிட்டு தப்பியோடியது. இதில் ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மற்றொரு பேருந்தில் லேசான சேதம் ஏற்பட்டது.

திமுக பிரமுகர் கார் எரிப்பு

துப்பாக்கிச் சூடு, தடியடியில் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வந்தார். அவருடன் வந்த விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து என்பவரது காரை 3-ம் கேட் மேம்பாலம் பகுதியில் ஒரு கும் பல் வழிமறித்து தீ வைத்தது. இதனால் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பியோடினர். கல்வீச்சு தாக்குதலில் அந்த வழியாக வந்த 8 வாகனங்கள் சேதமடைந்தன.

வன்முறை சம்பவங்கள் தொடர்ந்ததால் தூத்துக்குடி மாநகரம் 2-வது நாளாக நேற்றும் கல வர பூமியாக காட்சியளித்தது. ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில், ஐஜிக்கள் சைலேந்திரகுமார் யாதவ், வரதராஜூ உள்ளிட்ட 5 ஆயிரம் போலீஸார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை நிறுத்தம்

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி நேற்று பகல் 1 மணி அளவில் தொடங்கியது. 10 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், 4 நீதித்துறை நடுவர் கள் முன்னிலையில் பிரேத பரிசோதனையை தொடங்கினர். இது, முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 2 உடல் கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மத்தியக் குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டது. முன்னதாக பரிசோதனை செய்த உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை.

“ 5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x