Published : 28 May 2018 03:41 PM
Last Updated : 28 May 2018 03:41 PM

தூத்துக்குடி ஓபிஎஸ் விசிட்: பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த அதிமுக ஐடி.விங் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

தூத்துக்குடியில் ஓபிஎஸ் கலந்துகொண்ட நிகழ்வில் செய்தியாளர்களை அனுமதிக்காத நிலையில், அவர்களை  அவதூறாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட ஐ.டி.விங் நிர்வாகியை அதிமுகவிலிருந்து நீக்கி ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிமுக, அதன் அமைச்சர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் துப்பாக்கிச் சூடு குறித்து கண்டனம் எழுந்தது. அமைச்சர்கள் யாரும் தூத்துக்குடி செல்லாதது குறித்தும் விமர்சனம் எழுந்த நிலையில் நாளை சட்டப்பேரவை கூடுவதை ஒட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் தூத்துக்குடிக்குச் சென்றனர்.

ஓபிஎஸ் மருத்துவமனைக்குச் சென்றபோது வழி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸாரைப் போட்டு இடைமறித்து பத்திரிகையாளர்கள் யாரையும் உள்ளே விடாமல் பார்த்துக்கொண்டனர். இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் அதிமுகவின் காஞ்சிபுரம் கிழக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச்செயலாளர் ஹரிபிரபாகரன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “செய்தியாளர்கள் ஓபிஎஸ் மருத்துவமனை விசிட்டின்போது உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வாயிற்கதவில் கட்டப்பட்டுள்ள தெரு நாய்கள் பிஸ்கெட்டுக்காக குரைப்பது போல் உள்ளே அனுமதிக்கப்படாத பத்திரிகையாளர்கள் கத்திக்கொண்டிருந்தார்கள்” என்று தரக்குறைவாக விமர்சித்துப் பதிவிட்டிருந்தார்.

ஹரிபிரபாகரன் ஊடகங்கள் மேல் பாய்வது, அவதூறாகப் பதிவிடுவது இது முதல் முறையல்ல, பல முறை இவ்வாறு பதிவிட்டு பின்னர் பதிவை நீக்கி பகீரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய பதிவைப் பார்த்த செய்தியாளர்கள் இதை அதிமுகவின் மேலிட கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

உடனடியாக இது குறித்து அதிமுகவின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரனை கட்சியிலிருந்து திடீர் நீக்கம் செய்து ஓபிஎஸ், ஈபிஎஸ் உத்தரவிட்டனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளனர். ஹரிபிரபாகர்ன் அதற்கு நன்றி தெரிவித்து போட்டுள்ளார்.

மேலும் தான் பதிவிட்டது தனது சொந்தக் கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று அவர் பதிவிட்டுள்ளதற்கு கீழே நூற்றுக்கணக்கில் கண்டனம் பதிவிடப்பட்டு வருகிறது. ஹரி பிரபாகரன் தனது பதிவையும் நீக்கிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x