Published : 03 May 2018 09:17 AM
Last Updated : 03 May 2018 09:17 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக திவாகரனுக்கு சம்மன்: ஆறுமுகசாமி உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராக சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலாவின் உறவினர்கள், போயஸ் தோட்டத்தில் பணியாற்றியவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளார்.

இதுவரை 30-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரான சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

சிவக்குமாரிடம் விசாரணை

சசிகலாவின் உறவினரான இவர்தான் போயஸ் கார்டனில் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து வந்தார். அந்த வகையில் அவரிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி 3-வது முறையாக டாக்டர் சிவக்குமார் சேப்பாக்கம் கலச மகாலில் உள்ள விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சசிகலாவின் தம்பி திவாகரனை இன்று (3-ம் தேதி) நேரில் ஆஜராகச் சொல்லி விசாரணை ஆணையம் கடந்த 30-ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, திவாகரன் இன்று ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x