Published : 14 May 2018 09:19 AM
Last Updated : 14 May 2018 09:19 AM

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்: முழு அமர்வு பரிந்துரைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு பரிந்துரைத்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த 2015-ல் மதுரையைச் சேர்ந்த சில வழக் கறிஞர்கள் அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பாக உள்ளிருப்பு போராட் டம் நடத்தினர். இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வின் உத்தரவுப்படி உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கும் உயர் நீதிமன்றங்கள் ஒரு பகுதியாகவும், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றொரு பகுதியாகவும் தடுப்பு ஏற்படுத்தி இரண்டாக பிரிக்கப் பட்டன.

பின்னர், உயர் நீதிமன்றங்கள், நீதிபதிகளின் சேம்பர்கள், உயர் நீதிமன்ற அலுவலகங்கள் அடங்கிய பாரம்பரிய கட்டிடத்துக்கு மட்டும் 2015 நவம்பர் 16-ம் தேதி முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வரு கிறது. இதற்காக தமிழக அரசு 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.16.60 கோடி செலவிடுகிறது. மேலும் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிஐஎஸ்எப் போலீஸாரின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கக் கோரி சரவணன் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோ ரைக் கொண்ட முழு அமர்வு இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்தது. நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு போடப்பட்ட பிறகு எந்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை என்று தலைமைப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஒட்டுமொத்த உயர் நீதிமன்ற வளாகத்தையும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவருவது தொடர்பாக தலைமைப் பதிவாளர் ஒரு திட்டம் தயாரித்து அதை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:

வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர் கே.பாலு: உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு அவசியம்தான். அதேநேரம், உயர் நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், அரசு வழக்கறிஞர் அலுவலகங்கள், வழக்கறிஞர் சேம்பர்கள், சங்கங்கள், தபால் அலுவலகம், வங்கி, ரயில்வே முன்பதிவு மையம், மாநில சட்டப்பணிகள் ஆணையம் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

இவற்றையும் சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், நீதி தேடி வரும் சாமானிய மக்கள் பெரிதும் சிரமப்படுவார்கள். நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழன் சிலையே தற்போது சிஐஎஸ்எப் பாதுகாப்பு வளையத்தில்தான் உள்ளது. ஒட்டுமொத்த வளாகத்தையும் சிஐஎஸ்எப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தேவையில்லாத ஒன்று. அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வி. நளினி: சிஐஎஸ்எப் பாதுகாப்பே வேண்டாம் என்று கூறிவரும் நிலையில், எஞ்சிய பகுதி களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்துவது நீதிமன்றங்களைக் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் தனிமைப்படுத்துவது போல ஆகிவிடும். சாதாரண மக்கள் வழக்கறிஞர்களைச் சந்தித்து ஆலோசிக்கக்கூட முடியாத சூழல் உருவாகிவிடும்.

இதில், அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் ஆலோசித்து, அவர்களது கருத்துகளையும் கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x