Published : 03 May 2018 05:17 PM
Last Updated : 03 May 2018 05:17 PM

தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வெழுதினால் அவதிப்படுவார்கள்: வாசன்

தமிழக மாணவர்கள் நீட் தேர்வினை வெளிமாநிலங்களுக்குச் சென்று எழுத நேரிட்டால் பல சிரமங்களுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு முறையைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்த போதே தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்த்தது. ஆனாலும், மத்திய அரசு நீட் தேர்வு முறையை கட்டாயப்படுத்தி திணித்தது. அப்படி திணித்த நீட் தேர்வு முறையை அமல்படுத்திய போது அதில் பல்வேறு குழப்பங்கள், குளறுபடிகள் இருந்ததால் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முறையை தமிழகத்துக்கு ரத்து செய்ய வலியுறுத்தியும் பயன் இல்லை. இப்படி நீட் தேர்வு சம்பந்தமாக பல்வேறு இடையூறுகளையும், குழப்பங்களையும் சந்தித்து வருகின்ற தமிழக மாணவர்கள் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வெளிமாநிலங்களில் உள்ள மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதக்கூடிய நிலை ஏற்பட்டதற்கு காரணம் மத்தியில் ஆளும் பாஜக.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதுவதற்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையங்களுக்குச் சென்று தேர்வெழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தமாகா வருத்தம் தெரிவிக்கிறது. காரணம் ஏற்கெனவே நீட் தேர்வு சம்பந்தமாக கடினமாக முயற்சிகள் மேற்கொண்டு படித்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத நேரிட்டால் பல சிரமங்களுக்கு உள்ளாகி அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணம் மத்திய அரசு தான்.

எனவே, மத்திய அரசு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்குண்டான நிலையை ஏற்படுத்த உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x