Published : 17 May 2018 07:24 AM
Last Updated : 17 May 2018 07:24 AM

முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா மனு

இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாரதிராஜா மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். அவரது பேச்சு இரு பிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன், வடபழனி போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த போராட்டங்களில் நானும் பங்கேற்றேன். என்னை துன்புறுத்தும் நோக்குடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு நடந்தது. அப்போது, பாரதிராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதை மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக இன்று பதிலளிக்க வடபழனி காவல்ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x