Published : 25 May 2018 08:04 PM
Last Updated : 25 May 2018 08:04 PM
தென்னகத்தில் ஒரு நிரவ் மோடியாக வங்கிகளில் ரூ.824 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் நிறுவன உரிமையாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.
போலியான ஆவணங்கள் மற்றும் தங்க நகை இருப்பு காட்டி 14 வங்கிகளிடம் ரூ. 824 கோடி மோசடியாக கடன் பெற்ற கனிஷ்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த மார்ச் மாதம் சிபிஐ துணை இயக்குனரிடம் புகார் அளித்தது. இதையடுத்து கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடித் தடுப்பு பிரிவில் கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார், அவரது மனைவியும் நிறுவனத்தின் இயக்குநருமான நீதா ஜெயின், பங்குதாரர்கள் 3 பேர் உள்பட 5 பேர் மீது பெங்களூருவில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பூபேஷ்குமார் வங்கிகளில் பெற்ற கடனின் மூலம் வெவ்வேறு தொழில்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை சென்னை அமலாக்கத்துறையினர் கையிலெடுத்துள்ளனர். பூபேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து இன்று அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவை அடுத்து அவர் வரும் ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT