Published : 05 May 2018 06:43 AM
Last Updated : 05 May 2018 06:43 AM

1,6,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத் திட்டத்தில் தயாரான புத்தகங்கள்: முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்

புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் நேற்று வெளியிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் முதல் கட்டமாக 1,6,9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதைத்தொடர்ந்து, 2019-2020-ம் கல்வி ஆண் டில் 2,7,10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 3,4,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது. அதில் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் இடம்பெற்றனர்.

அந்த குழுவினர், சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர். இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. முதல்கட்டமாக மாற்றியமைக்கப்பட உள்ள வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை அச் சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழ கம் மேற்கொண்டது. இந்த நிலையில், இந்தப் பாடப் புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாட நூல்களை முதல் வர் வெளியிட்டார். தேசியக் கலைத்திட்டம் 2005-ல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையி லான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன் பும் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலை யில் மாணவர்களின் கல்வி மேம்பாட் டைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட நூல்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன் அடிப்படையில் மாணவர்க ளின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும் செயல்வழிகற்றல்முறை படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும் உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை உறுதி யோடு எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டமும் பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளியீட்டு நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் (கலைத்திட்டம்) த.உதயசந்திரன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.அனந்தகிருஷ்ணன், பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி, முன்னாள் துணை வேந்தர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாடப் புத்தகங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்

புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு விவரங்கள்.

மாணவர்கள் பெற வேண்டிய செயலாக்கத் திறன் மற்றும் குறிப்பிட்ட திறனை விவரித்தல்.

அன்றாட வாழ்க்கை, துறைசார் வளர்ச்சியோடு பாடப் பொருளை தொடர்படுத்தும் கூடுதல் விவரங்கள்.

தெளிவான புரிதலுக்காக தீர்வுகளுடன் கூடிய மாதிரி கணக்குகள்.

கற்ற திறன்களை தாங்களே சுயமதிப்பீடு செய்ய உதவி.

கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை ‘கியூஆர் கோடு’ மூலம் அணுகும் வசதி.

கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுகவும் கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறவும் வாய்ப்பளித்தல்.

பாடப் பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி.

சுருக்கிய வடிவில் பாடப்பகுதி கருத்து.

பாடப்பகுதியின் கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவ தன் மூலம் பாடப் பொருளை உணரச் செய்தல்.

பன்முக தெரிவு வினா, எண்ணி யல் கணக்கீடுகள் ஆகியவை மூலம் மாணவர்களின் புரிதல் நிலை மதிப்பீடு.

தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல்.

மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த விடைகளின் சரி தன்மையை உறுதி செய்யவும் கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி.

முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.

அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணை.

11-ம் வகுப்பு சிறப்பு தமிழ் பாடத்தில் ‘தி இந்து’ முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரி

11-ம் வகுப்பு சிறப்பு தமிழ் பாடத்தில் "ஊடகவியல்" பகுதியில் "ஊடகவியலில் தமிழ் ஆளுமைகள்" என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. அதில் பாரதியார், பெரியார், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.பா.ஆதித்தனார், ஏ.என்.சிவராமன், ஜி.கஸ்தூரி, வை.மு.கோதைநாயகி ஆகியோர் இதழியல் துறையில் ஆற்றியுள்ள பணிகள் குறித்தும் அவர்களின் சிறப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், ‘தி இந்து’ (ஆங்கிலம்) முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரி, காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தைக் கையாண்டு இதழியல் துறையை மேம்படுத்திய பணிகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நாளிதழின் அச்சமைப்பில் புதுமை, நாளிதழ் பக்கங்களை தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து பல்வேறு நகரங்களில் அச்சிடும் முறை, உலோக எழுத்துருக்களை கோர்த்து அச்சிடும் முறையில் இருந்து தட்டச்சு முறைக்கு மாற்றம், வண்ண அச்சுமுறை என அவரின் புதிய முயற்சிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x