Published : 21 May 2018 08:19 AM
Last Updated : 21 May 2018 08:19 AM
திமுக ஆதரவுக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மே 22) நடக்கிறது.
காவிரி பிரச்சினைக்காக திமுக தலைமையில் மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தின. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி இறுதித் தீர்ப்பு அளித்தது.
மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. காவிரி விவகாரத்தில் அனைத்து அதிகாரங்களும் கொண்டதாக இந்த அமைப்பு இருக்கும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். ஆனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி அணைகளை நிர்வகிப்பது உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக காவிரி மேலாண்மை ஆணையம் இல்லை என கூறியுள்ளன.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக ஆதரவு கட்சிகள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும்.
அதற்கேற்ப கர்நாடகத்தில் இருந்து தண்ணீரை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT