Published : 08 May 2018 08:42 AM
Last Updated : 08 May 2018 08:42 AM

ஜெ. நினைவு மண்டபத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்: பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடி செலவில் அமைகிறது- ஓராண்டில் பணிகள் நிறைவடையும் என தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்காக மெரினாவில் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. ஓராண் டில் பணிகள் முடிக்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி தெரி வித்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் அவருக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனி சாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நினைவிடம் அமைப்பதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டு, கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்த நிறுவனம் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது.

நினைவு மண்டபம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் (சிஎம்டிஏ) அண்மை யில் அனுமதி அளித்தது. இதையடுத்து, நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின. மே 7-ம் தேதி நினைவு மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக் கல் நாட்டு விழா, தமிழக அரசு சார்பில் நேற்று காலை நடந்தது. முன்னதாக அந்த இடத்தில் அதிமுக சார்பில் யாகம், பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்த இடத்துக்கு அருகில், யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பு, குழி வெட்டப்பட்டு, பூமி பூஜைக்கு தயாராக இருந்தது. யாகம், பூமி பூஜையில் பங்கேற்பதற்காக காலை 6.15 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனி சாமி வந்தார்.

காலை 6.30 மணிக்கு யாகம் தொடங்கியது. வேத விற்பன்னர் கள் 10 பேர் மந்திரங்களை கூறி யாகத்தை நடத்தினர். 9.15 மணி வரை பல்வேறு யாகங்கள் நடந்தன. முதல்வர், துணை முதல்வர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் எம்பி, மூத்த அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் யாக சாலை பூஜையில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து பூமி பூஜைக்கான பணிகள் தொடங்கின. யாகசாலை அருகில் அமைக்கப்பட்டிருந்த குழியில் முதல்வரும் துணை முதல்வரும் செங்கற்களை வைத்து வணங்கினர். யாகசாலையில் நடந்த பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின், அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் சென்றனர். அங்கு ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், 9.57 மணிக்கு நினைவு மண்டபத்துக்கு முதல் வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கே.பழனிசாமி கூறும்போது, ‘‘ரூ.50 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்தம் இறுதியான நிலையில், இன்று பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் ஓராண் டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும்’’ என்றார்.

ஜெயலலிதா நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. மொத் தம் 50,422 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல் நடைபாதை, புல்வெளி, நீர்த் தடாகம் உள்ளிட்டவை இடம் பெறும்.

அடிக்கல் நாட்டு விழாவில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், வி.மைத்ரேயன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணி யம் உள்ளிட்ட எம்பிக்கள், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல் வன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x