Published : 30 May 2018 09:30 AM
Last Updated : 30 May 2018 09:30 AM
அம்பத்தூர் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அம்பத்தூர் அருகே உள்ள பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி தன் வீட்டருகே விளையாடியபோது, விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன்(41) என்ற இளைஞர் அச்சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆகவே, இவ்வழக்கின் தீர்ப்பை நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பரணிதரன் அளித்தார்.
அத்தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 26 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை, ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் மணிகண்டன் அனுபவிக்க வேண்டும் என, தன் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT