Published : 25 Apr 2018 10:39 AM
Last Updated : 25 Apr 2018 10:39 AM
சென்னை கோயம்பேடு சந்தை யில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயன முறை யில் பழுக்க வைக்கப்பட்ட 2.8 டன் பழங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
கோயம்பேடு சந்தையில் கால்சியம் கார்பைடு கல் மூலமும், மருந்துகள் தெளித்தும் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சதாசிவம், மணிமாறன் உட்பட 10 அதிகாரிகள் நேற்று காலை கோயம் பேடு சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 23 கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அதில் ஒரு கடையில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதை கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, அந்த கடையில் ரசாயன முறையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பப்பாளி 2 டன், மாம்பழம் 800 கிலோ என மொத்தம் 2.8 டன் அளவுள்ள பழங்கள், 20 கிலோ கால்சியம் கார்பைடு கற்கள், 1.5 கிலோ எத்திலின் பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அதோடு, ரசாயன முறையில் பழங்களைப் பழுக்க வைத்த கடைக்கும் சீல் வைத்தனர்.
“பழங்களை விரைவாக பழுக்க வைத்து அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று செயற்கையான ரசாயன முறைகளை வியாபாரி கள் கையாள்கின்றனர். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப் படும்.
கார்பைடு கற்கள் உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்செரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளது குறித்து அறிந்தால், பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் தெரிவிக்கலாம்” என அதிகாரி கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT