Published : 26 Apr 2018 02:32 PM
Last Updated : 26 Apr 2018 02:32 PM

ஆசிரியர்கள் போராட்டம்; ஒரு நபர் கமிஷன் பொருத்தமற்றது: முதல்வரே நேரடியாக தலையிட முத்தரசன் வலியுறுத்தல்

 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வரே நேரடியாக தலையிட்டு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,“இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாட்டை தீர்க்கக் கோரியும், சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் என தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

கடந்த நான்கு தினங்களாக ஆசிரியர்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு நபர் கமிஷன் மூலம் தீர்வு காணப்படும் என்று கூறியிருப்பது பொருத்தமற்றதாகும்.

முதல்வர் நேரடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x