தமிழகத்தில் மே 31 வரை சில இடங்களில் லேசான மழை; பரவலாக வெப்பநிலை உயர வாய்ப்பு

படம்: எஸ்.சத்தியசீலன்
படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் இன்று மே 31-ஆம் தேதி வரை சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய வங்க கடல் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 05.30 மணி அளவில் வலுப்பெற்று, 08.30 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா -விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு - தென்மேற்கேயும், மேற்கு வங்காளம் - சாகர் ஐலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு - தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (25.05.2024) மாலை புயலாக வலுப்பெறக் கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை (26.05.2024) காலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை (26.05.2024) நள்ளிரவு வங்க தேச - கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று (மே 25) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.05.2024 முதல் 31.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38°-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39°-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29̊̊° -30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று (மே 25) முதல் 29.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று (மே 25) முதல் 27.05.2024 வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in