Published : 24 May 2024 01:39 PM
Last Updated : 24 May 2024 01:39 PM

தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (மே 24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்று வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலிம்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 24) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து நாளை (மே.25) புயலாக உருவாகும். இதற்கு ஓமன் நாடு ‘ரெமல்’ எனப் பெயர் வழங்கியுள்ளது. இது வங்கதேசத்துக்கு அருகே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்வதை எச்சரிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x