Published : 24 May 2024 01:28 PM
Last Updated : 24 May 2024 01:28 PM

தமிழகத்தில் ஜூன் 6-ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6-ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல் முன்னிட்டு இந்தாண்டு கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.

வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறந்து அன்றைய தினமே 2024 - 25-ம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x