Last Updated : 04 Apr, 2018 10:25 AM

 

Published : 04 Apr 2018 10:25 AM
Last Updated : 04 Apr 2018 10:25 AM

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை - கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்கியதால் விபரீதம்

 மதுரையில் கணவனுக்கு தெரியாமல் கடன் வாங்கிய பெண்,பயம் காரணமாக,  இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை பழங்காநத்தம் கணபதி நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (25). காதல் திருமண செய்து கொண்ட இந்த தம்பதியருக்கு, புவனேஷ்வரி(9), தனலட்சுமி(7), முருகேஷ்வரி(5) ஆகிய 3 மகள், விஜயகணேஷ் என்ற 8 மாத குழந்தை இருந்தனர். மூர்த்தி தனது பெற்றோர், தங்கை ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்.

மூர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் திருமங்கலத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இவரது தந்தை பாலு பழங்காநத்தம் பகுதியிலுள்ள ஒரு டீக்கடைக்கும், தாயார் வீட்டு வேலைக்கும், தங்கை கல்லூரிக்கும் சென்றனர். இரு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்ற நிலையில், எஞ்சிய இரு குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில், மதியம் 1.30 மணிக்கு பாலு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது, பிரியா மற்றும் குழந்தைகள் முருகேஷ்வரி, விஜயகணேஷ் ஆகியோர் இறந்து கிடந்தனர். வாயில் நுரை தள்ளி இருந்தது. இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பாலு மகனுக்கு தகவல் கொடுத்தார்.

மேலும், இதுபற்றி தகவல் அறிந்த மதுரை சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில், பிரியா தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸார் கூறுகையில், “முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் பிரியா தனது இரு குழந்தையுடன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. மூத்த குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றதால் உயிர் தப்பியுள்ளனர். பிரியா கணவருக்கு தெரியாமல் சிலரிடம் கடன் வாங்கியதாகவும் இதுபற்றி கணவர் கேட்டதால் பிரச்னை ஏற்படுமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்” என தெரிவித்தனர். இச்சம்பவம் பழகாநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x