Published : 12 Apr 2018 05:00 PM
Last Updated : 12 Apr 2018 05:00 PM
திருச்சியில் கர்ப்பிணி உஷா மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடைய போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி அருகே கடந்த மார்ச் 7 ஆம் தேதி வாகன சோதனையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது, தம்பதியர் சென்ற இருசக்கர வாகனத்தை காமராஜ் துரத்திச் சென்று எட்டி உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பிணி உஷா கீழே விழுந்து இறந்தார். அவரது கணவர் ராஜா படுகாயமடைந்தார். ராஜா தலைக்கவசம் அணியாததாலேயே, காவல் ஆய்வாளர் காமராஜ் அவரது இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டர்.
இதன்பின் அவர் ஜாமீன் கோரி திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து, ஜாமீன் கோரி காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காமராஜ் தொடர்ந்து 35 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், புகார்தாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
இதைத்தொடர்ந்து ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT