Published : 27 Apr 2018 10:32 PM
Last Updated : 27 Apr 2018 10:32 PM

கணவரின் நினைவு நாளில் சோகம்: பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நகை அபகரிப்பு

கணவரின் நினைவு நாளுக்கு கல்லறைக்குச் சென்ற பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நகையை பறித்துச்சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராயப்பேட்டை முதல் தெருவில் வசிப்பவர், மேரி நித்யா (64). இவரது கணவர் டிசில்வா மறைந்த நினைவு நாள் நேற்று வந்தது. இதையடுத்து கணவரின் கல்லறை இருக்கும் புனித மேரி சாலையில் உள்ள கல்லறையில் மரியாதை செலுத்த மதியம் 2.30 மணி அளவில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் பின்னால் வந்த ஒரு நபர் மேரி நித்யாவிடம், 'என்னம்மா இப்படி அலட்சியமாகப் போகிறீர்கள், உங்களை நோட்டமிட்டு நகையைப் பறிக்க இரு சக்கர வாகனத்தில் ஒரு கும்பல் உங்கள் கழுத்தில் உள்ள செயினை பறிக்கச் சுற்றி வருகிறார்கள், நீங்களோ வயதானவர்களாக இருக்கிறீர்கள்?' என்று கூறியுள்ளார்.

'அய்யோ நான் என்ன செய்வேன்?' என்று மேரி நித்யா கேட்க, 'ஒன்று செய்யுங்கள் செயினைக் கழற்றுங்கள். நான் பேப்பரில் சுற்றித்தருகிறேன், பையில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் போய் எடுத்து கழுத்தில் போட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறியுள்ளார்.

'நல்ல வேலை செய்தாய் தம்பி' என்று மேரி நித்யா செயினைக் கழற்றி அவரிடம் கொடுக்க அந்த நபரும் பேப்பரில் மடித்துவைத்து மேரி நித்யாவிடம் கொடுத்துள்ளார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கல்லறைக்குச் சென்ற பின் வீட்டுக்குப் போய் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்த மேரி நித்யாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பேப்பர் பொட்டலத்தைப் பிரிக்க பிரிக்க பேப்பராக வந்துள்ளது. 2.5 பவுன் செயினை கவனத்தை திசை திருப்பி பறித்துச்சென்ற நபர் மீது மேரி நித்யா மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x