Published : 30 Apr 2018 08:47 AM
Last Updated : 30 Apr 2018 08:47 AM
பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் மாணவிகளிடம் பாலியல்ரீதியாகப் பேசியதாக கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நிர்மலாதேவியை 5 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நிர்மலாதேவியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து இன்று (ஏப்.30) பிற்பகலில் இருவரும் சாத்தூர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரி முன்னாள் இந்நாள் நிர்வாகிகளிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்தாக்கப் பயிற்சி மைய இயக்குநர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீஸார் விருதுநகரில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் விஜயனிடம் நேற்று முன்தினம் இரவு சிபிசிஐடி போலீஸார் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரைத் தொடர்ந்து பழநியைச் சேர்ந்த பேராசிரியர் செல்வராஜ், மதுரை காமராசர் பல்கலைக்கழகப் புத்தாக்கப் பயிற்சியாளர் பேராசிரியர் குமாரராஜன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீஸார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே, திருச்சுழியில் உள்ள ஆய்வு மாணவர் கருப்பசாமியின் வீட்டில் இருந்த அவரது செல்போனை போலீஸார் நேற்று பறிமுதல் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT