Published : 26 Apr 2018 09:22 PM
Last Updated : 26 Apr 2018 09:22 PM

சென்னையில் ஐடி ஊழியர்களுடன் காரை தாறுமாறாக ஓட்டியதில் வேன் மீது மோதிய ஓட்டுநர் பலி

 அண்ணா நகர், திருமங்கலம் 100 அடி சாலையில் ஐடி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்ற கார் வேன் மீது மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார், 3 பேர் காயமடைந்தனர்.

சென்னை தரமணியில் உள்ள ஐடி கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பணியில் காஞ்சிபுரம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (27) என்பவர் டவேரா காரை வாடகைக்கு ஓட்டி வந்தார்.

நேற்று இரவு பணி முடிந்த ஊழியர்கள் கொளத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன், திருவிக நகரைச் சேர்ந்த அனில்குமார் (25) ஆகிய இருவரையும் ஏற்றிக்கொண்டு கொளத்தூர் நோக்கிச் சென்றார். போகும்போதே அதிகமான வேகத்தில் தாறுமாறாகச் சென்றுள்ளார்.

அண்ணா நகர் திருமங்கலம் 100 அடி சாலையில் அன்பு நகர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த வேனின் மீது மோதியுள்ளார். இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

காரிலிருந்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. வேனில் இருந்த மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளி சதீஷ் (27) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. ஓட்டுநர் சந்திரசேகரனுக்கு தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது, வெங்கடேஷுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அனில் குமாருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 4 பேரும் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் ஓட்டுநர் சந்திரசேகரனை சோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, காயமடைந்த மற்றவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x