Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சேமிப்பு கிடங்குக்கு நக ராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சத்தியமூர்த்தி தெருவில், செயற்கை இலை, தேநீர் கப் போன்ற பொருட்களை விற்கும் சந்தன் சிங் என்பவரது கடையின் சேமிப்புக் கிடங்கு பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டனர். அதனை திறக்க தங்களிடம் சாவி இல்லை என சந்தன் சிங் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருவள்ளூர் நகர போலீஸாரின் உதவியுடன் சேமிப்புக் கிடங்கின் பூட்டை உடைத்த அதிகாரிகள், கிடங்கின் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ.3 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் உறைகள், தேநீர் கப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சேமிப்புக் கிடங்குக்கு சீல் வைத்தனர்.
நகராட்சி ஆணையர் அட்சயா, சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன், ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT