Last Updated : 19 Apr, 2018 01:58 PM

 

Published : 19 Apr 2018 01:58 PM
Last Updated : 19 Apr 2018 01:58 PM

எச்.ராஜா தரம் இல்லாத அரசியல்வாதி: நாராயணசாமி விமர்சனம்

எச்.ராஜா தரம் இல்லாத அரசியல்வாதி என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் நாராயணசாமி இன்று கூறியதாவது:

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் தற்போது பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஏடிஎம் மையங்களில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கு பிரதமர் மோடி முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் ஏடிஎம் மையங்களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி மற்றும் நிதித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து எச்.ராஜா தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "எச்.ராஜா தரம் இல்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியையும், கனிமொழியையும் தரம் தாழ்த்திப் பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ராஜா எதைப் பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்சனைகள் நீர்த்துபோகாது.''

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x