Published : 10 May 2024 02:43 PM
Last Updated : 10 May 2024 02:43 PM

“ஆசிரியர் பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்குவதில் திமுக அரசு பணம் பெற்று ஊழல்” - சீமான் குற்றச்சாட்டு

சீமான் | கோப்புப்படம்

சென்னை: “திமுக அரசுப் பணியிட மாறுதலிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் லட்சக்கணக்கில் முறைகேடாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊழல் செய்வதற்காக, முதலில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு அதன்பிறகு பதவி உயர்வு வழங்கி வருகின்றது. திமுக அரசின் இந்த ஊழல் நடவடிக்கை எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் வழக்கமான நடைமுறைக்கு மாறாக ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு அதன்பிறகு பதவி உயர்வு வழங்கி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. இது குறித்து ஆசிரியர்களும், சங்கங்களும் அரசிடம் பலமுறை முறையிட்டும் அவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய பதவி உயர்வினை திமுக அரசு வழங்க மறுத்து தாமதித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக பணியிட மாறுதல் வழங்குவதால் மிகப்பெரிய குழப்பமும் ஏற்படுகின்றது. முதலில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வினை வழங்கிவிட்டால், பதவி உயர்வுக்கு ஏற்ப அதே பள்ளியிலோ அல்லது அருகில் உள்ள அரசுப் பள்ளியிலோ காலியாக உள்ள பணியிடங்கள் எளிதாக நிரப்பப்படும்”.

மேலும், பதவி உயர்வு அளித்ததினால் உருவாகும் காலிப்பணியிடங்களையும் சேர்த்துக் கணக்கிட்டு அதன்பின் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கும் வழி ஏற்படும். ஆனால் திமுக அரசுப் பணியிட மாறுதலிலும், பதவி உயர்வு வழங்குவதிலும் லட்சக்கணக்கில் முறைகேடாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊழல் செய்வதற்காக, முதலில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு அதன்பிறகு பதவி உயர்வு வழங்கி வருகின்றது. திமுக அரசின் இவ்வூழல் நடவடிக்கை எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

ஒரே பள்ளியில் காலியாக உள்ள பணியிடத்தைப் பணியிட மாற்றம் மூலம் முதலில் நிரப்பிவிட்டு பின்பு, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்குப் பதவி உயர்வினை வழங்கி தொலைதூர மாவட்டத்தில் வேறொரு பள்ளிக்கு அனுப்புவதென்பது ஆசிரியர் பெருமக்களுக்குக் கடும் தண்டனையாகவே அமையும்.

ஆகவே, திமுக அரசு இனியாவது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித் துறையில் தகுதி உடைய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கிவிட்டு, அதன் பிறகு ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்” என்று சீமான் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x