‘பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு’ - தேர்தல் ஆணைய நடவடிக்கை கோரி முறையீடு @ சென்னை ஐகோர்ட்

‘பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு’ - தேர்தல் ஆணைய நடவடிக்கை கோரி முறையீடு @ சென்னை ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜரான சூரிய பிரகாசம், விக்டர் ஆகியோர் முறையீடு ஒன்றை முன்வைத்தனர். ‘நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாது மற்றும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் பிரச்சாரங்களின்போது, பிரதமர் நரேந்தி மோடி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரதமர் தனது பேச்சின் மூலம் மத கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கிறார். எனவே, பிரதமரின் இந்தப் பேச்சுக் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மனுவில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சேர்த்திருப்பதால், உயர் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யும் பிரிவில் மனுவுக்கு எண்ணிட மறுக்கின்றனர். எனவே, அந்த மனுவை விசாரணைக்கு எண்ணிட்டு, அந்த வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று முறையீடு செய்தனர். இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in