சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக புகார்: கோவை சிறையில் சட்டப் பணிகள் ஆணையக் குழு ஆய்வு

கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் | கோப்புப்படம்
கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை: சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் சட்டப்பணிகள் ஆணையக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர். இவர், தனது நேர்காணல் ஒன்றில், காவல்துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். அன்றைய தினம் காலை தேனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, கோவை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “சவுக்கு சங்கரை மத்திய சிறையில் அடைக்கும்போது வாய் பகுதியில் சிறிது காயம் இருந்தது. ஆனால், அவரை சிறையில் அடைத்த பின்னர் காவலர்கள் அவரை பலமாக தாக்கியதால் தற்போது உடல்முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நடந்து வருகிறது. மேலும் சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க வேண்டும், சவுக்கு சங்கரை, நீதிபதி நேரில் பார்க்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளோம்” என்றார்.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், சிறையில் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவுக்கு விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் வழக்கறிஞர் சண்முகவேலு உட்பட மூன்று பேரும், மருத்துவர்கள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் கோவை மத்திய சிறைக்கு இன்று (மே 7) சென்றனர்.

காலை 11.15 மணியிலிருந்து மதியம் 1.15 மணி வரை சவுக்கு சங்கரிடம் விசாரித்தனர். பின்னர், வெளியே வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், அடுத்தகட்ட விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in