Published : 17 Apr 2018 03:35 PM
Last Updated : 17 Apr 2018 03:35 PM

நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்து சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

“ஆளுநருக்கு அடுத்த லெவலில் உள்ள முக்கியமான விஐபிக்களுக்கு தேவை, அதனால் தான் பேசுகிறேன். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்' என்று ஆசை காட்டிப் பேசுகிறார்.

ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசி உள்ளார் என்றெல்லாம் பேசி மிகப்பெரிய விஐபிக்கு தேவை. அவர் பெயரைச்சொன்னாலே நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்கிறார். இந்த ஆடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியே வந்தது. இது நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து அருப்புக்கோட்டை போலீஸார் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகை வரை செல்வாக்கு என்று பேசியதால் இந்த விவகாரத்தில் சந்தேகம் ஆளுநர் மாளிகை வரை நீண்டது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் சந்தானம் தலைமையில் உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பல பெரிய விவிஐபிக்களுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x