2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 116 கி.மீ நீள பாதையில் 300 வளைவுகள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116.1 கி.மீ. தொலைவை கொண்ட 3 வழித் தடங்களில், 300 வளைவுகளில் மெட்ரோ ரயில் பாதைகள் இடம்பெற உள்ளன.

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை ( 45.4கி.மீ ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை ( 26.1 கி.மீ. ) 4-வது வழித்தடம், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை ( 44.6 கி.மீ. ) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 300 வளைவுகளில் மெட்ரோ ரயில் பாதைகள் இடம்பெற உள்ளன. அதாவது, 116.1 கி.மீ.-ல் 50 கி.மீ.வரை வளைவுகளில் பாதைகள் இடம்பெற உள்ளன. இவற்றில் 16 கி.மீ. வரை கூர்மையான வளைவுகளில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் கூர்மையான வளைவு பாதையாக, ஆலந்தூர் அருகே கத்திப்பாராவில் 125 மீட்டர் சுற்றளவில் அமைகிறது.

விரிவான திட்ட அறிக்கையில், மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் 116 வளைவுகளும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் 73 வளைவுகளும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 111 வளைவுகளும் உள்ளன.

மடிப்பாக்கம், போரூர், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம் மற்றும் மஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளை இணைக்கும் 4-வது மற்றும் 5-வது வழித்தடங்களில் கூர்மையான வளைவுகள் கட்டப்படுகின்றன.

சிக்கல்களை குறைக்க ஏற்பாடு: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்களை குறைக்கும் விதமாக, பல்வேறு வளைவுகள் இடம்பெற்று உள்ளன. உயர் மட்டப் பாதையில் வளைவு கூர்மையானதாக இருக்கும். சுரங்கப் பாதையில் வளைவுகள் குறுகியதாகவும், மென்மையானதாகவும் இருக்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in