Published : 07 Apr 2018 04:50 PM
Last Updated : 07 Apr 2018 04:50 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தான் அவரை பார்த்து காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைகளை பெற்றதாக, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். நீதிபதி ஆறுமுகசாமி கடந்தாண்டு நவம்பர் மாதம் விசாரணையை தொடங்கினார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் இன்று (சனிக்கிழமை) சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் கூறியதாவது:
“கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற காவிரி ஆலோசனைக் கூட்டம் குறித்து விசாரணை ஆணையத்தில் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் பதிலளித்தேன்.
கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 24 அன்று மாலை 4 மணிமுதல் 6 மணி வரை ஜெயலலிதா காவிரி வழக்கு குறித்து எனக்கு ஆலோசனை வழங்கினார். காவிரியை எப்படி காப்பாற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்க வைக்க வேண்டும், உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் கூறினார்.
ஜெயலலிதா காவிரிக்காகவே வாழ்ந்தார், தமிழகத்திற்காக வாழ்ந்தார்.செப்டம்பர் மாதத்திற்கு பிறகும் நான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்தேன்”
என ராம மோகன ராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT