Published : 25 Apr 2024 06:21 AM
Last Updated : 25 Apr 2024 06:21 AM

பூந்தமல்லி | வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் சைக்கிளில் சுற்றி திரிந்த சிறுவனை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீஸார்

பூந்தமல்லியில் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் சைக்கிளில் சுற்றித் திரிந்த சிறுவனை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போலீஸார்.

பூந்தமல்லி: பூந்தமல்லியில் வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் சைக்கிளில் சுற்றித்திரிந்த சிறுவனை போலீஸார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன் தினம் இரவு சைக்கிளில் 6 வயது சிறுவன், தன் வீட்டுக்கு வழி தெரியாமல் சுற்றித் திரிந்தான்.

இதனையறிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது, அச்சிறுவன், ‘தாத்தா’ என்ற வார்த்தையை தவிர வேறு எந்த சொல்லையும் சொல்ல வில்லை.

மேலும் அந்த சிறுவனுக்கு தன் வீடு இருக்கும் திசையையும், இருப்பிடத்தை சரியாக சொல்ல முடியவில்லை. இதுகுறித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த தகவலின்படி, பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடம் விரைந்து சிறுவனிடம் அவனின் இருப்பிடம் குறித்து விசாரணை மேற்கொண்டதோடு, அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ராமதாஸ் நகரைச் சேர்ந்த ஜெகன், தன் மகன் ரிசிவந்த்(6) காணவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் ஜெகனை மொபைல் போன் மூலம்தொடர்பு கொண்டு, சைக்கிளில் சுற்றித் திரிந்த சிறுவனின் அடையாளம் குறித்து தெரிவித்தனர். அப்போது, அவர் சைக்கிளில் சுற்றித் திரிந்த சிறுவன் தன் மகன் ரிசிவந்த் என தெரிவித்தார்.

இதையடுத்து, ஜெகனை பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு வரவழைத்து ரிசிவந்தை அவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஜெகன் போலீஸாருக்கு நன்றி தெரிவித்து மகன் ரிசிவந்த்தை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் சைக்கிளில் சுற்றித் திரிந்த சிறுவனை போலீஸார் மீட்டு 2 மணி நேரத்தில் தந்தையிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x