Published : 25 Apr 2024 06:20 AM
Last Updated : 25 Apr 2024 06:20 AM

பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: மத வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலும், நாட்டு மக்களிடையே மத ரீதியான பிளவை ஏற்படுத்தும் வகையிலும் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜி.செல்வா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ராஜசேகர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் ரவீந்திரநாத் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கடந்த 4 நாட்களுக்கு முன்புராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்துக்களின் வீடு, சொத்துகள் அனைத்தையும் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என மோடிபேசியிருக்கிறார்.

மத வெறியைதூண்டும் வகையில் பேசுவதைமோடி வழக்கமாக கொண்டிருக் கிறார். கடந்த காலங்களிலும் இதுபோன்று பேசி, அதன் மூலம் அரசியல் அறுவடையும் செய்திருக்கிறார். நாட்டின் ஒற்றுமை பற்றி மோடிக்கு கவலை இல்லை.

எனவே, தேர்தல் ஆணையம் மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது. அதுமட்டுமில்லாமல், இந்திய தண்டனை சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் மோடி மீது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மோடி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் மனுவை அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x