பிரதமர் ‘ரோடு ஷோ’ - பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை ஜுன் 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி சீருடையில் அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, கோவை சாய்பாபா காலனி போலீஸில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸார், சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியை மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் தாளாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதில், ‘‘பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாகக் கூறும்குற்றச்சாட்டு தவறானது.

பள்ளிக் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தவில்லை. பள்ளி நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஜுன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in