கோவையில் பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து சென்றதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாகப் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை தொடர்ந்த வழக்கில், போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவையி்ல் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை பள்ளி சீருடையில் அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, கோவை சாய்பாபா காலனி போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸார், சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியை மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை புகழ்வடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உள்நோக்கத்துடன் புகார்: அதில், ‘‘பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாகக் கூறும்குற்றச்சாட்டு தவறானது. பள்ளிகுழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தவில்லை. பள்ளி நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் ஏப்.3-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். அதுவரை பள்ளிநிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியைக்கு எதிராக போலீஸார் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாதுஎன்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in