Published : 24 Apr 2024 07:35 PM
Last Updated : 24 Apr 2024 07:35 PM

நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் பணம் பறிமுதல் செய்த விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட பணம். | கோப்புப்படம்

சென்னை: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாயும்; திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரின் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு சட்டவிரோதப் பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x