Published : 24 Apr 2024 04:43 AM
Last Updated : 24 Apr 2024 04:43 AM

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்: திருநங்கைகள் திரண்டு தாலி கட்டி வழிபாடு

கும்மியடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்த திருநங்கைகள். (உள்படம்) கூத்தாண்டவரை கணவராக ஏற்று, தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள். படங்கள்: எம்.சாம்ராஜ்

கள்ளக்குறிச்சி: திருநங்கைகளின் இஷ்ட தெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவரை மணந்து, பூசாரிகளிடம் தாலிகட்டிக் கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலியானதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறும். அப்போது திருநங்கைகளுக்கு மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நடப்பாண்டு சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடைபெற்றது. நேற்று மாலை திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளும் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி தொடங்கியது.

இதில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்திருந்தனர். முதன்முறையாக, அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கைகளான லில்லி, ஆர்யா ஆகியோரும் கோயிலுக்கு வந்தனர்.

திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலுக்கு மணப்பெண் அலங்காரத்தில் வந்து, பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் விடிய விடிய கோயில் வளாகத்தில் கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சுற்று வட்டார கிராம மக்களும் விழாவில் பங்கேற்றனர்.

இன்று காலை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெறும். அரவான் தேரில் அழைத்துச் செல்லப்பட்டு, பலியிடப்படுவார். அப்போது திருநங்கைகள் அழுது, தாலியை அறுத்து விதவைக்கோலம் பூண்டு, சோகத்துடன் ஊர் திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அறநிலையத் துறை சார்பில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட போதிலும், போதிய தண்ணீர் வசதி இல்லை என்றும் பலரும் புகார் தெரிவித்தனர். மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு திருநங்கைகள் வரவு குறைவாகவே இருப்பதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x