Published : 22 Apr 2024 05:36 AM
Last Updated : 22 Apr 2024 05:36 AM

பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: ஆறு மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 5 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இரண்டு மாதங்களில் தகுதியான ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்படும். அதன்பிறகு, 6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ., தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் நடைபெறும் 3 வழித்தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றான கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் கடந்த ஜன. 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு, பூந்தமல்லி – பரந்துார் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பூந்தமல்லி - பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்டஅறிக்கை தயாரிக்க 5 ஆலோசனைநிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

5 நிறுவனங்கள் விண்ணப்பம்: இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லியில் இருந்துதிருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரைமெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பாகவிரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான, ஒப்பந்தப் புள்ளியில் ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினீயர்கள் மற்றும் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக்காக ஏலம் அனுப்பப்படும். பின்னர் நிதி ஏலத்தின்போது, குறைந்த ஏலதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த செயல்முறை இரண்டு மாதங்கள் ஆகலாம்.

பூந்தமல்லி முதல் பரந்தூர் வரைவழித்தடத்தின் நீளம் 43.63 கி.மீ. ஆகும். பூந்தமல்லி - பரந்தூர்நீட்டிப்பு திட்டத்தில் நசரத்பேட்டை,செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, பெரும்புதூர் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக்கூறு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு ரூ.10,712 கோடி.

இத்தடத்தில் பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை 6 மாதங்களில் தயாரிக்கப்படும். விரிவான திட்ட அறிக்கையில், மேம்பால பாதை, சுரங்கப்பாதை வழித்தடங்கள், ரயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x