Last Updated : 18 Apr, 2024 02:24 PM

 

Published : 18 Apr 2024 02:24 PM
Last Updated : 18 Apr 2024 02:24 PM

புதுச்சேரி | வாக்கு இயந்திரங்களை மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்: தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்.19) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை செய்து வருகின்றது. புதுச்சேரியை பொருத்தவரையில் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

இந்த தேர்தலில் 2587 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1254 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1324 வி வி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு மகளிர் பொறியியல் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இரு வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. புதுச்சேரி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில். “வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அனைத்து முகவர்கள் முன்னிலையில் அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்று மாலை 4 மணிக்குள் வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்றடையும். வாக்குச் சாவடிகளில் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை வரை ரூ.44,17,120 மதிப்பிலான 21,543 லிட்டர் மது வகைகள், ரூ.8 லட்சத்து 7 ஆயிரத்து 234 மதிப்பிலான 148.303 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ரூ.75 லட்சத்து 13 ஆயிரத்து 860 பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் துறையின் பறக்கும் படையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். நேற்று இரவு வரை ரூ.64 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று இரவு வரை மொத்தம் ரூ.1 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 860 பறிமுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 154 மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பந்தமாக புகார்கள் வந்தன. அதன்படி இன்று காலை வரை 5 பேரை கைது செய்து பணம் பறிமுதல் செய்துள்ளோம். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

ஊனமுற்றவர்கள், வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு இரண்டு வகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தன்னார்வலர்கள் இருப்பார்கள். அவர்கள் சக்கர நாற்காலியுடன் தேவைபடுவோருக்கு உதவிபுரிவார்கள். இதே போல் தேர்தல் துறை சர்வே படி 347 வாக்காளர்கள் போக்குவரத்து வசதி வேண்டும் என கேட்டுள்ளனர். அவர்களுக்கு 37 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவர்களை வீட்டுக்கே சென்று அழைத்து வந்து வாக்களித்த பிறகு மீண்டும் வீட்டுக்கு சென்று விட்டுவிடுவார்கள். தேர்தல் நேர்மையான முறையில் நடக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எங்கு புகார்கள் வந்தாலும் உடனடியாக நாங்கள் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 100 சதவீத வாக்குப் பதிவுக்காக தேர்தல் துறை மூலம் பல்வேறு முயற்சிகளையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். நிச்சயம் 100 சதவீத வாக்குப் பதிவு புதுச்சேரி மக்களவை தேர்தலில் பதிவாகும் என்று எதிர்பார்க்கின்றோம். வாக்குச் சாவடிகளில் குடிநீர், மருத்துவ வசதி, நிழற்கூரைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோடை வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் வயது முதிர்ந்தவர்கள் காலை, பிற்பகல் 3 மணிக்கு மேல் வந்து வாக்குப்பதிவு செய்யலாம். வாக்குச் சாவடிகளுக்கு குழந்தைகளை, சிறார்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x