குட்கா வழக்கில் விசாரணையை இழுத்தடிப்பதாக சிபிஐ-க்கு நீதிமன்றம் கண்டனம்

குட்கா வழக்கில் விசாரணையை இழுத்தடிப்பதாக சிபிஐ-க்கு நீதிமன்றம் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறி மூன்று ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக சிபிஐ-க்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரித்து வருகின்றது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா , முன்னாள் டிஜிபி, சென்னை காவல் துறை முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டவிட்டது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக இதே பதிலை மட்டுமே கூறுவதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை மே 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in