Published : 12 Apr 2024 05:28 AM
Last Updated : 12 Apr 2024 05:28 AM

இடமாற்றம் செய்யப்பட்ட 4,450 பேரை அண்ணாமலை பல்கலை.யில் நியமிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உபரி பணியாளர்கள் எனக்கூறிஅண்ணாமலை பல்கலைக்கழகத் தில் இருந்து பதவி இறக்கம் மற்றும் ஊதிய குறைப்பு செய்யப்பட்டு அரசின் வேறு துறைகளுக்கு 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் 4 ஆயிரத்து 450 பேரை மீண்டும் பழையபடி பழைய சம்பளத்தில் பல்கலைக்கழகத்திலேயே 4 வாரங்களில் நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிர்வாககுளறுபடியால் ஏற்பட்ட நிதிச்சுமைகாரணமாக அந்தப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் பல்கலை.யில் பணியாற்றி வந்த 1,204 ஆசிரியர்கள் மற்றும் பிரிவு அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள், மண்டல அதிகாரிகள் மற்றும் வடிவமைப்பாளர்களாக பணியாற்றி வந்த 3,246 ஆசிரியரல்லா பணியாளர்களை உபரி பணியாளர்கள் எனக்கூறி கடந்த 2016முதல் 2020 காலகட்டத்தில் சிலரைபல்கலைக்கழகத்திலேயே உதவிபிரிவு அலுவலர்கள், ஆய்வக உதவியாளர்கள், பதிவு எழுத்தர்கள், தட்டச்சர்கள், உதவியாளர்கள் போன்ற பணிகளுக்கும், பலரை பொதுப்பணித்துறை, வேளாண் துறை, பிற அரசு கல்லூரிகள் மற்றும் அரசின் பிற இதர துறைகளுக்கும் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பதவி குறைப்பு மற்றும் ஊதிய குறைப்பு செய்து தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உத்தரவிட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களுக்கு பணி நீட்டிப்புவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சட்ட விரோதம்: இந்த வழக்குகளை விசாரித்தநீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அண்ணாமலை பல்கலை.யில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து எந்த வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில், உபரி பணியாளர்கள் எனக்கூறி எந்த அடிப்படையில் மனுதாரர்கள் பதவி குறைப்பு, இடமாற்றம் மற்றும் ஊதிய குறைப்பு செய்யப்பட்டனர் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, எந்தவொரு விசாரணையுமின்றி 4,450 பேரை பதவி குறைப்புடன், ஊதிய குறைப்பும் செய்து அரசின் வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது.

அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப்பிறகும் பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமையில் எந்த மாற்றமும்ஏற்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தையும் ஏற்க வேண்டியுள்ளது. எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உபரி பணியாளர்கள் எனக்கூறி பதவி குறைப்பு, ஊதிய குறைப்பு, இடமாற்றம் செய்யப்பட்ட 4,450 பேரையும் மீண்டும் பழையபடி பழையஊதியத்தில் பல்கலைக்கழகத் திலேயே 4 வார காலத்தில் நிய மிக்க வேண்டும்.

ஒருவேளை பழைய பதவிகள் தற்போது இல்லை என்றாலும் அதற்கு தகுதியான பதவிகளை உருவாக்கி இவர்களை பணியமர்த்த வேண்டும்’’ என உத்தரவிட் டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x