Published : 01 Apr 2018 10:02 AM
Last Updated : 01 Apr 2018 10:02 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்.3-ல் கடையடைப்பு போராட்டம்: வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியவாவது:

காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசும், மத்திய அரசும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. இந்நிலையில், இறுதியாக காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைத்து அறிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த காலக்கெடு கடந்த 29-ம் தேதியோடு முடிந்துவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

எனவே, காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். 21 லட்சம் கடைகள் அன்று அடைக்கப்பட உள்ளன. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினை என்பதால் அரசியல் சார்பற்று அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்புகள் என அனைவரும் இந்த கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று தமிழக நலன்காக்க முன்வர வேண்டும்.

சினிமா, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்கள், பெட்ரோல், மருந்து விற்பனை நிலையங்கள், லாரி, பேருந்து, டாக்சி, ஆட்டோ சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சங்கங்கள் தமிழகம் தழுவிய இந்த ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வரும் 11-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ஒரே கடை அடைப்பு போராட்டமாக 3-ம் தேதி நடத்த ஒத்துழைப்பு தரவேண்டும். எங்களது கடை அடைப்பு போராட்டத்துக்கும் அதிமுகவின் உண்ணாவிரதத்துக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மருந்து விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் ஆகியவையும் கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. எனவே, அன்று மருந்துக் கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x