Published : 10 Apr 2024 05:50 AM
Last Updated : 10 Apr 2024 05:50 AM

வெள்ளக்கோவில் அருகே அதிகாலையில் கார் - பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த சந்திரசேகரன், சித்ரா, இளவரசன், அருவிவித்ரா.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நேற்று அதிகாலை காரும், பேருந்தும் மோதிய விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் காங்கயம் சாலை நல்லிக்கவுண்டன்நகர், புதுநகர் 7-வது தெருவைச்சேர்ந்தவர் சந்திரசேகரன்(60). சாயப்பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி சித்ரா(57). இவர்களின் மூத்த மகன் சசிதரன். அவரது மனைவி அருவிவித்ரா(30), தம்பதியின் 3 மாத கைக்குழந்தை சாஷி மற்றும் சந்திரசேகரின் இளையமகன் இளவரசன்(26).

சந்திரசேகரன் மற்றும் சித்ரா தம்பதியின் 60-ம் திருமணத்துக்காக அனைவரும் காரில் மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை இளவரசன் ஓட்டி வந்துள்ளார்.

நேற்று அதிகாலை 1 மணி அளவில், வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்த காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக் கொண்டன. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

காரில் இருந்த சந்திரசேகரன், சித்ரா, இளைய மகன் இளவரசன், அருவிவித்ரா, மூன்று மாத பெண் குழந்தை சாஷி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சசிதரன் பலத்த காயமடைந்தார்.

அரசு பேருந்தின் ஓட்டுநரான கரூ‌ர் மாவ‌ட்ட‌ம் மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன்(51) மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்பட பேருந்து பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவ இடத்தை காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், வெள்ளகோவில் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சசிதரன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x