Published : 08 Apr 2024 03:39 PM
Last Updated : 08 Apr 2024 03:39 PM

வாக்குக்கு பணம் தருவதை தடுக்க கோரி உண்ணாவிரதம்: கோவை அமைப்புக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், ‘வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக, கோவை சிவானந்தா காலனியில் 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தேன். ஜனநாயகத்தில் ஒருவருடைய வாக்குரிமை என்பது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் மதிப்புமிக்க, சக்திவாய்ந்த அகிம்சை ஆயுதம். அந்த வாக்கின் புனிதத்தை காக்க வேண்டிய கடமை அரசியல் சட்ட அதிகார அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கும், மக்களுக்கும் உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்க்ளுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெறுவதால் ஜனநாயக கொள்கையும், அரசியல் சாசன புனிதமும் கெட்டு விடுகின்றன. சிறந்த மக்கள் பிரதிநிதிகள் வெற்றி பெற முடியாமல் போகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தாலும், போலீசாராலும் தடுக்க முடியவில்லை. எனவே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ஏப்ரல் 11-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x