Last Updated : 07 Apr, 2024 07:46 PM

1  

Published : 07 Apr 2024 07:46 PM
Last Updated : 07 Apr 2024 07:46 PM

பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியிருந்தாலும் கூட பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்காது: உதயநிதி விமர்சனம்

தமிழக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேலத்தை அடுத்த ஓமலூரில், சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். | படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: பிரதமர் மோடி, சட்டப்பேரவை தேர்தல் வரையிலும் தமிழகத்தில் குடியிருந்தாலும் கூட, பாஜக -வுக்கு தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்று திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, சேலத்தை அடுத்த ஓமலூரில் இன்று மாலை வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசியது: ''பிரதமர் மோடி, தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாதவர். வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்துக்கு வராதவர். நான் கடந்த 3 ஆண்டுகளில் சேலத்துக்கு மட்டும் 20 முறை வந்துள்ளேன். சேலம் மாவட்டத்தில் தான் இளைஞரணி மாநில மாநாட்டினை நடத்தினோம். சட்டப்பேரவை தேர்தலின்போது, ஓமலூர் தொகுதி மக்கள், திமுகவுக்கு வாக்களிக்காமல் விட்டீர்கள். ஆனால், உங்களுக்காக தமிழக அரசு பல திட்டங்களை செய்துள்ளது. மேலும், பல திட்டங்கள் ஓமலூர் தொகுதியில் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளர்.

திமுக அரசு கொண்டு வந்த மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்தில், தமிழகத்தில் இதுவரை பெண்கள் 465 கோடி பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 120 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு கல்வி பயில உரிமையில்லை, வேலைக்கு செல்ல உரிமையில்லை, மேலாடை அணியவும் உரிமையில்லை. இந்த உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது வழியில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், முதன் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகும். ஆனால், தமிழகத்தில் 54 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.

தமிழக முதல்வர் கொண்டு வந்த பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களும் செயல்படுத்துகின்றன. இப்போது, கனடா நாட்டிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்தியாவைக் கடந்து, உலக நாடுகளும் திமுக அரசின் திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை.

தமிழக மக்களுக்கு உதவிகள் செய்ய வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக, தமிழகத்தை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அவர் சட்டப்பேரவை தேர்தல் வரையிலும், தமிழகத்தில் குடியிருந்தாலும் ஒரு சீட்டு கூட பாஜக-வுக்கு கிடைக்காது.

தமிழகம் ஜிஎஸ்டி-யாக மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அதில் 29 பைசா-வை மட்டுமே தமிழகத்துக்கு மோடி கொடுக்கிறார். ஆனால், உத்தரபிரதேசத்துக்கு ரூ.3-ம் பீகாருக்கு ரூ.7-ம் என திருப்பிக் கொடுக்கிறார். தமிழகத்தின் நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என அனைத்தையும் மத்திய அரசு பறித்துவிட்டது. இதற்கெல்லாம் உடந்தையாக, அதிமுக அரசு இருந்தது. திருக்குறளை கூறும் பிரதமர் மோடி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்காக, ரூ.1,500 கோடியை ஒதுக்கியுள்ளார்.

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை. ஆனால், அதன் பின்னர் பாஜக ஆளும் 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டுவிட்டன. முதல்வர் ஸ்டாலின், 10 மாதங்களில் கிண்டியில் ரூ.350 கோடியில் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டிவிட்டார். இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை விமர்சித்து, நான் செங்கல்லை காண்பித்துப் பேசினேன். ஆனால், நான் கல்லை காட்டுவதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகிறார்.

அவர் சிரித்த முகம் கொண்டவர். நான் அதை உருவகேலி செய்யவில்லை. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டாமல், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் சிரித்ததை தான் விமர்சிக்கிறேன். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் என்றே தெரியவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசுகிறார். ஆனால், யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட, யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x