Published : 03 Apr 2024 10:03 PM
Last Updated : 03 Apr 2024 10:03 PM

“தமிழக அரசுக்கான வெளிநாட்டு வங்கிகளின் கடன்தான் அந்த 5,000 கோடி ரூபாய்!” - நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதில்

திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

திருவண்ணாமலை: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள், என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார். அது முதலில் மத்திய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழகத்துக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழக அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது” என்று திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.3) திருவண்ணாமலையில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நான் எல்லாக் கூட்டங்களிலும் சொல்வது போன்று, இந்த தேர்தல்களம், இரண்டாவது விடுதலை போராட்டம்.

இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், பேரறிஞர் அண்ணா சொன்னதைத்தான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அண்ணா சொல்லுவார்: “இந்த உலகத்தில் எங்களுக்கு இரண்டு எஜமானர்கள். ஒன்று, எங்கள் மனச்சாட்சி. இரண்டு, இந்த நாட்டு மக்கள்” இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மக்களுக்காக மனச்சாட்சிப்படி நல்லாட்சி நடத்துபவன். தமிழகத்தைப்போலவே, டெல்லியிலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும் என்றுதான் உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன். இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க, ஜனநாயகச் சக்திகளும், இந்திய நாட்டு மக்களும் களம் கண்டுள்ள இந்த ஜனநாயகப் போர்க்களத்தில், இண்டியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இன்றைக்குத் தமிழக மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது. நம் தமிழகத்தை மதிக்கும், நம் அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றும், நம் இனத்தை, இனத்தின் பண்பாட்டை மதிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, நம் தாய்நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் வேண்டும். அப்படிப்பட்ட பிரதமரைத்தான், இண்டியா கூட்டணி நிச்சயம் வழங்கும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜனநாயகத்தை, தமிழகத்தை நாட்டின் எதிர்காலத்தை, இளைஞர்களை, மகளிரை, எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்கும்.

இந்தியாவில் சமூக நீதி நீடிக்க வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும். எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும். அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மை தொடர வேண்டும். அதற்கு முதலில், பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏன் என்றால், ”பாஜக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்” என்று இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தயாராகிவிட்டார்கள்.

இந்த நல்ல செய்தி, திருவண்ணாமலையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் மட்டுமல்ல, தென்மாநிலங்களில் மட்டுமல்ல, வடமாநிலங்களில் இருந்தும் ஒட்டுமொத்த இந்தியாவிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. இந்தச் செய்தியை நன்றாக உணர்ந்திருப்பது யார் தெரியுமா? தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும், ஏதாவது பொய்யையும், புரளியையும் கிளப்பி மக்களைக் குழப்பி வாக்கு வாங்க நினைக்குறாரே பிரதமர் மோடி, அவருக்குத்தான் முதலில் தெரியும்.

அதனால்தான், இப்போது பயத்தில், தன்னுடைய கூட்டணியாக இருக்கும் IT துறையை விட்டு, ஜூன் மாதம் வரைக்கும் காங்கிரஸ் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று சொல்கிறார்.அதேபோல், ED-யை விட்டு, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு பெயில் கொடுக்க சம்மதிக்கிறார். ED,IT, CBI இதெல்லாம் போதாது என்று, நாட்டு மக்களைக் குழப்ப இப்போது RTIயையும் கூட்டணியில் சேர்த்திருக்கிறார். இனிமேல் மோடி சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவருக்கே தெரிந்துவிட்டதால், RTI பெயரில் புரளிகளைக் கிளப்பி, குறளிவித்தை காண்பிக்கிறார். மோடி குழப்பத்தில் இருக்கிறார் என்பது, உத்தரப் பிரதேசத்தில் சென்று கச்சத்தீவு பற்றி பேசுவதிலேயே தெரிகிறது.

இது ஏப்ரல்தான். இன்னும் மே மாதம் இருக்கிறது. ஜூன் மாதம் இருக்கிறது. உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ம் தேதி தெளிந்துவிடும். பாஜக எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டுக்கு விடுதலை கிடைத்துவிடும். ஜூன் 3 – மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு. ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள். நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதல்வர் கருணாநிதி, தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ, எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ, அவற்றைப் பாதுகாக்கும் இண்டியா கூட்டணியின் வெற்றியை, அவரது நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வேட்டி-சட்டை எல்லாம் போட்டு, தமிழ்த் தொலைக்காட்சிக்குப் பிரதமர் மோடி பேட்டி என்ற பெயரில் சூட்டிங் செய்திருந்தார். அதிலாவது உண்மையைப் பேசினாரா? ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்கள் என்று பத்தாண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தேன் என்று சொல்லியிருந்தார் என்றால் சபாஷ் போட்டிருக்கலாம். கருப்புப் பணத்தை மீட்டுவிட்டேன். அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டுவிட்டேன் என்ற சொல்லியிருந்தால், கை தட்டியிருக்கலாம். உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பு செய்துவிட்டேன். விலைவாசியைக் குறைத்துவிட்டேன். நதிகளை இணைத்துவிட்டேன். தமிழக மீனவர்கள் கைதினைத் தடுத்துவிட்டேன். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல்படுத்திவிட்டேன் என்று சொல்லியிருந்தார் என்றால் வாழ்த்தி இருக்கலாம்.

ஆனால், அந்தப் பேட்டியில் இது எதுவும் இல்லையே. தமிழக மக்கள் கேட்கிறார்கள் என்று நானும் ஒவ்வொரு மேடையிலும் கேட்கிறேனே, பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்குச் செய்த சிறப்புத் திட்டம் என்ன சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். அதற்கு பதில் சொல்லவில்லை. அந்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தவர்கள், அது நியூஸ் டைம்-ஆ? இல்லை, காமெடி டைம்-ஆ? என்று கொஞ்சம் கன்பியூஸ் ஆகிவிட்டார்கள். ஏன் என்றால், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள், பேட்டி எடுத்தவர்களே, ஆடிப் போய்விட்டார்கள்!

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே, பிரதமர் மோடிக்குத் தெரியாதுதானே? டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கைது செய்தார்களே, அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே, அதுவும் அவருக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் IT, ED, CBI இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது. நாங்கள் நம்பிவிட்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால், நாளைக்கு உங்களுக்கும் குஜராத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்தடுத்து இரண்டு இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தோம். எட்டு மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. பாதிப்புகளைச் சீர் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும், 37 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டோம். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பிரதமர் ஆறுதல் சொல்லவில்லை. கேட்ட நிதியையும் தரவில்லை.ஆனால் என்ன சொன்னார் தெரியுமா?

“நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி வைத்திருக்கிறேன். அவர் வந்து பார்த்துவிட்டு நிதியை ஒதுக்குவார்” என்று என்னிடம் பிரதமர் மோடி சொன்னார். சொன்னபடி, நிர்மலா சீதாராமன் மட்டும்தான் வந்தார், நிதி வரவில்லை. நிதி ஒதுக்காமல் என்ன சொன்னார்? “சும்மா நீங்கள் கேட்கும்போதெல்லாம் தர முடியாது” என்று நக்கலாக பதில் சொன்னார்.அவரின் பேச்சுகளைப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. நிர்மலா சீதாராமனை எதற்காக நிதி அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்றால், இது போன்று நக்கலாக பதில் சொல்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு உதவி செய்வதைப் பிச்சை என்று கொச்சைப்படுத்தினார் நிர்மலா சீதாராமன்.

ஆணவச் சிந்தனை கொண்ட நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், “ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள்” என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார்கள். அது முதலில் மத்திய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழகத்துக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழக அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது. மக்களுக்குப் புரிய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கி சொல்கிறேன்.

பொதுவாக ADB – KFW மாதிரியான வெளிநாட்டு நிதி அமைப்புகளில் தமிழக அரசு கடன் வாங்கினால், அந்தப் பணம் முதலில் மத்திய அரசின் கணக்குக்கு வந்துதான் மாநில அரசுக்கு டிரான்ஸ்பர் ஆகும். அப்படி, மாநில அரசு வாங்கிய கடன் எப்படி மத்திய அரசின் நிதியாகும்? அப்படி வந்த பணத்தை மத்திய அரசு கொடுத்ததாகச் சொல்வது எப்படி நியாயம்? பொய் சொன்னாலும், பொருந்தச் சொல்லுங்கள். ஊரை ஏமாற்றத் திருக்குறள் சொல்லாமல் உளமார ஒரு திருக்குறளைப் படியுங்கள். “தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்!”

மத்திய அரசு நிதி ஒரு ரூபாய்கூட கொடுக்காமல், கணக்கு கேட்கிறீர்களே கணக்கு, மாநில அரசு நிதியில் இருந்து என் மக்களுக்காக நான் செய்ததற்குக் கணக்கு சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள், மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு 10 அரசாணைகள் வெளியிட்டு, 2 ஆயிரத்து 476 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசே நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. மிக்ஜாம் புயலுக்கு மத்திய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. ராமநாதபுரம் மாவட்ட வறட்சிக்கும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. இது எல்லாவற்றிற்குமேல் மாநில அரசு நிதியைத்தான் கொடுத்தோம். எதற்குமே நிதி கொடுக்காமல் பிரதமர் மோடி மாதிரியே நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார்.

நிர்மலா சீதாராமன், ஓட்டுக் கணக்கு போட்டு, பொய்களை அள்ளி வீசினால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று மனக் கணக்கு போடாதீர்கள். நாள் கணக்கில்தான் உங்கள் ஆட்சி இருக்கிறது. ஆணவத்தில் தப்புக் கணக்கு போடாதீர்கள். நான் மறுபடியும் தெளிவாகச் சொல்கிறேன். நாங்கள் கேட்கும் நிதி, NDRF என்ற தேசிய பேரிடர் நிதியில் இருந்து, 37 ஆயிரம் கோடி ரூபாயைத் தாருங்கள் என்று கேட்கிறோம். அதில் செலவு செய்யாமல் 58 ஆயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கிறீர்களே, அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். அவர்கள் கொடுத்ததாகச் சொல்வது, பேரிடர் ஏற்பட்டாலும் ஏற்படவில்லை என்றாலும் நமக்குக் கண்டிப்பாகத் தர வேண்டிய SDRF என்ற மாநிலப் பேரிடர் நிதி. கரகாட்டக்காரன் படத்தில் வருமே, வாழைப்பழ காமெடி, அது போன்று… “அதுதான் இது – இதுதான் அது” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பார்த்தால், அவர்களுக்கு நக்கலாகத்தான் இருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு உதவிகள் வழங்கும் போதும், செய்திக்குறிப்பாகத் தந்து, அதெல்லாம் செய்திகளில் வந்திருக்கிறது. நிர்மலா சீதாராமன் அதையெல்லாம் கொஞ்சம் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டுத் தமிழக மக்களைப் பார்த்து, ஏகடியம், நக்கல், நையாண்டி, கிண்டல், கேலி என்று ஆணவமாகப் பேச வேண்டாம். ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கொடுக்க உங்களிடம் பணம் இருக்கிறது; ஆனால் மனம்தான் இல்லை.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும், சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் நடக்கும் தேர்தல். மதவாதத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் நடக்கும் தேர்தல். பாஜக இழைக்கும் சமூக அநீதிக்கும், சமூக நீதிக்கும் நடக்கும் தேர்தல். பாஜக தலைமையிலான சந்தர்ப்பவாதக் கட்சிகளுக்கும், இண்டியா என்ற கொள்கைக் கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். வெறுப்பாட்சியை அகற்றி, நல்லாட்சியை அமைக்கவுள்ள தேர்தல். அதை மனதில் வைத்துதான், சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம்.

ஆன்மிகத்தின் முக்கியமான அடையாளமாக இருக்கும் நகரங்களில் ஒன்று, இந்தத் திருவண்ணாமலை. எல்லார்க்கும் எல்லாம், என்று அனைத்து மக்களுக்குமான அரசாக, நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. ஆன்மிகக் கோயில்கள் முறையாகச் செயல்படுவதற்காக இந்து சமய அறநிலையத் துறையை நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கியதே, நீதிக்கட்சி ஆட்சிதான். அனைத்துத் துறையும் வளர்வதுதான் திராவிட மாடல் வளர்ச்சி என்று முழங்கி, திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

‘திராவிடம்’ என்ற சொல் யாருக்கெல்லாம் பயத்தைக் கொடுக்கிறதோ யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் மதவாதத்துக்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர, மதத்துக்கு எதிரிகள் அல்ல. மறைந்த முதல்வர் கருணாநிதியின் பாணியில் சொன்னால் “கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது!” என்பதே எங்கள் எண்ணம். மொத்தத்தில், மதங்களை வைத்து மக்களைப் பிளவுபடுத்த நினைப்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகள்.நான் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அதிகமாகக் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் எது தெரியுமா? இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் விழாக்கள்தான். அந்த அளவுக்கு ஏராளமான பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறோம்.

நடப்பது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல். இண்டியா கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல், யார் ஆளக் கூடாது என்று சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்துக்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

ஒரு பக்கம் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொல்வார்; மற்றொரு பக்கம் பாஜகவை எதிர்க்க முடியாது. அது கூட்டணி தர்மம் என்று சொல்வார். ஆளுங்கட்சியாக இருந்தால் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக எதிர்க்கிறார்கள் என்று சொல்வார். எதிர்க்கட்சியாக மக்களால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி ஏன் எதிர்க்க வேண்டும்? என்று அரசியல் தத்துவ மேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப் புது தத்துவங்களாகப் புலம்புவார்.

இப்படிப்பட்ட பழனிசாமி தமிழகத்துக்கு மட்டும் துரோகம் செய்தவர் இல்லை. தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்தியவர். அவரின் ஃபிளாஷ்பேக் என்ன? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, பழனிசாமி முதலில் சசிகலா அணியில் இருந்தார். சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்தபோது, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று ஒரு காமெடி செய்தார். இந்த நிலைமையில் சசிகலா சிறைக்குப்போக, அவரது கால் நோக்கி ஊர்ந்து, தவழ்ந்து கூவத்தூர் கவனிப்புகளால் முதல்வரானார் பழனிசாமி.

உடனே, டிடிவி தினகரனுக்கு வாக்கு கேட்டுச் சென்றார். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆனது. “கட் பண்ணா” பன்னீர்செல்வம்கூட கூட்டணி சேர்ந்து, அதே தினகரனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அடுத்து, பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்துக்கு வாட்டர் பாட்டில் மரியாதை செய்தார். இப்படி ஒரு மெகா சீரியல் எடுக்கும் கதைபோன்று குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான், பழனிசாமியின் கதை.

இப்போது, பிரிந்து போனவர்கள் பாஜகவுடன் நேரடி கூட்டணியாகவும், பழனிசாமி கள்ளக் கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள். இப்போது, இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி. தமிழகத்தை வஞ்சித்த பாஜக அதற்குத் துணைபோகும் பாமக தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள்.தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு துணைநிற்கப் போகும் இண்டியா கூட்டணியின் மத்திய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x