Published : 03 Apr 2024 12:13 AM
Last Updated : 03 Apr 2024 12:13 AM

‘பழனிசாமியிடம் இருப்பதால் இரட்டை இலை தோல்வி சின்னம்’ - டிடிவி தினகரன் பேச்சு @ சிவகாசி

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து தினகரன் பிரச்சாரம்

சிவகாசி: பழனிசாமி வசம் இருப்பதால் ‘இரட்டை இலை’ தோல்வி சின்னம் என சிவகாசியில் நடந்த பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் பேசினார். சிவகாசி காரனேசன் சந்திப்பில் நடந்த வாகன பிரச்சாரத்தில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து அவர் பேசினார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது.. “நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக பாஜக சார்பில் ராதிகா போட்டியிடுகிறார். நமது தொகுதிக்கு தேவையான அனைத்து தேவைகளையும், திட்டங்களையும் நிறைவேற்ற 3-வது முறையாக மோடி பிரதமராக வர வேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய பிரதமர் மோடி தான் நமது பிரதமர் வேட்பாளர்.

திமுக கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. இண்டியா கூட்டணி என்பது தலை இல்லாத முண்டம் போல உள்ளது. நமக்கு சிங்கம் போல மோடி உள்ளார். 3 ஆண்டுகளாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக ஆட்சி உள்ளது. மறுபக்கம் இரட்டை இலையை வைத்துக் கொண்டு பழனிசாமி ஏமாற்றி வருகிறார்.

துரோகத்தின் மூலமே அதிமுகவை பழனிசாமி கைப்பற்றியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்தபோது இரட்டை இலை வெற்றி சின்னம், இப்போது பழனிசாமியிடம் இருப்பதால் இரட்டை இலை தோல்வி சின்னம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு பழனிசாமியை முதல்வராக்கியது.

நமது கூட்டணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் சுயேச்சையாகவும், நான் தேனியிலும் போட்டியிடுகிறேன். சேலத்து சிங்கம் எனக்கூறி கொள்பவர்களும், மணிகளும், விழுப்புரத்தில் தள்ளாடுபவரும், கிருஷ்ணகிரியில் திராவிட இயக்கத் தளபதி என்பவரும் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை.

திமுக கூட்டணி பணத்தை நம்பி தேர்தலில் நிற்கின்றது. இவர்களின் மக்கள் விரோத ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சித் துணையோடு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

10 ஆண்டுகளாக நடந்த சிறந்த ஆட்சியினால் தீவிரவாதிகள் இந்தியா பக்கம் தலை வைத்து கூட பார்க்கவில்லை. அண்டை நாடுகள் இந்தியாவிடம் வாலாட்டுவது கிடையாது. பிரதமர் மோடியால் உலக நாடுகள் இந்தியாவை அனைவரும் தலை நிமிர்ந்து பார்க்கிறார்கள். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாகும்” என்றார். அவருடன் வேட்பாளர் ராதிகா இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x