Published : 12 Apr 2018 09:33 AM
Last Updated : 12 Apr 2018 09:33 AM
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடலில் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி ஐடி பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் இருந்த ராம்குமார்(24) என்ற இளைஞரை அதே ஆண்டு ஜூலை 1-ம் தேதி நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் ஜூலை 18-ம் தேதி மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கும் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவர்களின் முன்னிலையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை ராம்குமாரின் பெற்றோர் மற்றும் அவரது வழக்கறிஞரிடம் கொடுக்கப்படாமல் அதிகாரிகளின் கைவசமே இருந்தது. ராம்குமார் இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கூடவே, ராம்குமார் மரணம் குறித்து விசாரணை நடத்திய திருவள்ளூர் நீதிபதி தமிழ்ச்செல்வியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘ராம்குமாரின் உடலில் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்திருப்பதற்கான காயங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நாடி, கழுத்து, வாயில் 2 இடங்கள், வலது கன்னத்தில் 2 இடங்கள், இடது மார்பில் 4 இடங்கள், இடது கையில் 2 இடங்களில் என மொத்தம் 12 இடங்களில் மின்சாரம் பாய்ந்துள்ளது’ என தெரியவந்துள்ளது.
உறவினர்கள் புகார்
தற்கொலை செய்யும் நபரின் உடலில் இப்படி காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. திட்டமிட்டு கொலை செய்தால் மட்டுமே இதுபோன்ற காயங்கள் ஏற்படும் எனவே, சிறையில் ராம்குமாரை கொலை செய்துள்ளனர். சுவாதியை கொலை செய்த உண்மை குற்றவாளியை காப்பாற்றப் பார்க்கின்றனர் என்று ராம்குமாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT