Last Updated : 01 Apr, 2024 09:11 PM

3  

Published : 01 Apr 2024 09:11 PM
Last Updated : 01 Apr 2024 09:11 PM

“மக்களை திசை திருப்புகிறது பாஜக” - கனிமொழி எம்.பி அடுக்கிய குற்றச்சாட்டுகள்

திருநெல்வேலி: “ஒருபக்கம் பிரதமருக்கு திடீரென்று தமிழ்ப் பாசம் வந்துவிட்டது. மறுபக்கம் அண்ணாமலையோ தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். அந்தப் போராட்டத்தைப் பிஞ்சு போன செருப்புக்குச் சமம் என்று கூறுகிறார்” என்று கனிமொழி எம்.பி சாடியுள்ளார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து வள்ளியூரில் கனிமொழி எம்.பி.பேசுகையில், “வரக்கூடிய தேர்தல் என்பது எப்போதும் நாம் சந்திக்கின்ற தேர்தல் போல் இல்லை. இது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவில் ஒரு தேர்தல். ஏனென்றால் நிச்சயமாக இந்த தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக மீண்டும் வராது. ஆனால் ஒரு விபத்து போன்று அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்றால், இதுதான் இந்தியாவில் நடைபெறும் கடைசி தேர்தல் என்பது நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு யாரும் வந்து ஓட்டு கேட்க மாட்டார்கள் சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் இந்த தேர்தல், நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இந்த தேர்தல், சாமானிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல், மீனவர்களுடைய உரிமைகள், விவசாய மக்களுடைய உரிமைகள் இங்கே இருக்கக் கூடிய சகோதரர்களின் உரிமைகள் இதையெல்லாம் மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரதமர் தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது வரவில்லை. மிகப்பெரிய பாதிப்பு தூத்துக்குடி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்திலும் வந்தபோது எட்டிக் கூட பார்க்கவில்லை. நிதி அமைச்சரை அனுப்பினார். ஆனால் ஒரு ரூபாய் கூட வரவில்லை. அந்த நிதி அமைச்சரைக் கூட்டிக்கொண்டு எல்லா இடங்களையும் காண்பித்தது நமது நிதி அமைச்சர். இவ்வளவோ கஷ்டங்களைக் காண்பித்த பிறகும் அவர்கள் நிதி கொடுப்பார்கள் என்று பார்த்தால், நிவாரணம் தருவார்கள் என்று நினைத்தால் ஒன்றும் வரவில்லை.

இந்த பக்கம் பிரதமர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் தேர்தல் வந்த பிறகு பிரதமர் தமிழ்நாட்டுக்குத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார். ஆனால் எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் ஓட்டு தேறாது என்றும், மூன்றாவது இடத்திற்கு முயற்சி செய்வோம் என்று பிரதமர் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார். நோட்டாக்கு கீழே போய் தான் பழக்கம். இந்த தடவையாவது மூன்றாம் இடத்துக்கு வரலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.தேர்தல் வந்தவுடன் தமிழ் மொழியின் மேல் பாசம் வந்துவிட்டது பிரதமருக்கு. திருக்குறள் சொல்லுவார். ஆனால் அது திருக்குறளா என்று நாம் கண்டுபிடிக்க முடியாது.

தமிழ் தான் மிகவும் பழமையான மொழி என்று பிரதமர் கண்டுபிடித்துள்ளார். திடீரென்று பாசம் வந்துவிட்டது எனக்குத் தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார். நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்ற வருத்தப்படுகிறார். நீங்கள் எங்களையெல்லாம் இந்தி கற்றுக்கொள் என்று சொல்கிறீர்கள். அதே மாதிரி நீங்களும் தமிழை கற்றுக் கொள்ளுங்கள். நம்முடைய முதல்வரிடம் சொன்னால் உடனே ஒரு நல்ல ஆசிரியர் பார்த்து நிச்சயமாக டெல்லிக்கு அனுப்பி வைப்பார். இதன் பிறகு நீங்கள் டெல்லியில் இருக்க மாட்டீர்கள், நீங்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்றுக் கொடுப்பது பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயமாகத் தமிழ் கற்றுக் கொள்ளலாம்.

ஆனால், இந்தப் பக்கம் பிரதமருக்கு திடீரென்று தமிழ் பாசம் வந்துவிட்டது. அந்தப் பக்கம் அண்ணாமலை தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசி உள்ளார். அந்தப் போராட்டத்தைப் பிஞ்சு போன செருப்புக்குச் சமம் என்று கூறுகிறார் என்று அவ்வளவு வாய்த் துடுக்கு, துணிச்சலாக பேசுகிறார். இங்குள்ள அனைத்து குடும்பங்களிலிருந்தும் யாராவது ஒருவர் இந்தி எதிர்ப்பில் கலந்து கொள்ளாத குடும்பங்கள் இருக்க முடியாது. எத்தனை பேர் உயிர்த் தியாகம் செய்தார்கள் தமிழ் மொழிக்காக, இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை ஒருவர் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். அப்படி என்றால் அதுதான் பாஜகவின் உண்மையான முகம்.

தமிழ் மொழி மேல், தமிழர்கள் மேல் அக்கறை கிடையாது மரியாதை கிடையாது. இங்கே நமக்கு எல்லாம் வர வேண்டிய வரியை எடுத்துக் கொண்டு திருப்பித் தருவது ஒன்றும் கிடையாது. நிவாரணம் கேட்டால் ஏன் கெஞ்சுகிறீர்கள் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

நம்முடைய தமிழ்நாடு நிதி அமைச்சர் இருக்கிறார். அவர் பலமுறை சொல்லி இருக்கிறார். ஒரு ரூபாய் நம்மிடம் இருந்து வரியை வாங்கிட்டு போய் திருப்பிக் கொடுக்கிறது 25 அல்லது 26 பைசா என்று. இதே பாஜக அரசாங்கம் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்குக் கொடுக்கிறது 2 ரூபாய் 2 பைசா. இப்படித் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கக் கூடிய பாஜக ஆட்சி.

எந்தப் பிரச்சினையைப் பேசினாலும் அதற்குப் பதிலாக இன்னொரு பிரச்சினையைத் தான் பேசுவார்களே தவிரக் கேட்கக் கூடிய கேள்விக்குப் பதில் வராது. உலகத்திலேயே பெரிய ஊழல் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. மோடி பேசும் போது சொல்வார் நாங்கள் எல்லாம் கரம் படாத கரங்கள் என்று. ஆனால், மிகப்பெரிய ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்தான்.

தேர்தல் நிதியில் பணம் வாங்கி இருக்கிறார்கள் யாரும் தானாக முன்வந்து தரவில்லை. ஒரு நிறுவனத்துக்கு, ரெய்டு விடுவார்கள். அங்கு இருக்கக் கூடிய முதலாளிகளிடமிருந்து தேர்தல் பத்திரம் வாங்கப்படும். ரூ.50 கோடிக்கு ரூ.100 கோடி அல்லது அதற்கு மேலே வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு அந்த வழக்கு காணாமல் போய்விடும் இதுதான் பாஜக தொழில் செய்பவர்களை மிரட்டி வாங்கிய பணம்.

இப்படித்தான் தேர்தல் பத்திரங்களை பாஜக வாங்கிக் கொண்டிருக்கிறது. யார் மேல் வழக்கு உள்ளதோ அவர்கள் பாஜகவுக்கு வந்து விட்டால் வழக்கு காணாமல் போய்விடும். ஆனால் இவர்களை எதிர்த்தால் வழக்கு. இரண்டு முதலமைச்சர்களைச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக டெல்லியின் துணை முதலமைச்சர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி பெயில் கொடுக்கவில்லை.

இப்படி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கி, எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்யும் வகையில், தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் வங்கிக் கணக்கை எல்லாம் முடக்கி விட்டார்கள். ஏதாவது ஒரு பிரச்சனை என்று வந்தால் மக்களைத் திசை திருப்ப வேண்டும், அதுதான் பாஜகத் தெரிந்த அரசியல்.

மக்களைத் திசை திருப்பி மக்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கி அதில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரிப்பார்கள். நாம் எல்லாம் ஒன்றாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஜக தன்னுடைய அரசியலுக்காக மக்களை தனித்தனியாகப் பிரித்து அதில் குளிர் காயலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.

தென்னிந்தியாவில் அதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் சுத்தமாக இடமில்லை. ஆனால் இப்பொழுது நமது வட இந்தியாவில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளைப் பற்றிப் புரிந்து கொண்டீர்கள் அவர்களுக்கு வேலை கிடையாது, எந்த படித்த இளைஞர்களுக்கும் வேலை கிடையாது. ராகுல் காந்தி சொன்னார் 45 வருடங்களில் வேலை இல்லா திண்டாட்டம் மிக மோசமாக இருக்கக் கூடிய சூழல் இதுதான் என்று.

இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி, இப்படிப்பட்ட மக்கள் விரத ஆட்சி, அவர்கள் இரண்டு பேருக்காக ஆட்சி நடக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி என்றால் தள்ளுபடி செய்ய மாட்டார்கள். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி வேண்டும் என்றால் 68 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

நம்ம விமான நிலையம் விரிவாக்கப்பட வேண்டும் பன்னாட்டு விமான நிலையமாக மற்ற பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு பத்து நாளில் பன்னாட்டு விமான நிலையமாக, பெரிய விமானம் மாற்றி கொடுக்கப்பட்டது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x