Published : 31 Mar 2024 11:16 AM
Last Updated : 31 Mar 2024 11:16 AM

ஈரோடு உழவர் சந்தையில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) இரவு ஈரோடு வந்தார். இன்று இரவு, சின்னியம்பாளையத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டதில், ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இதனிடையே, இன்று காலை ஈரோடு சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தையில், பொதுமக்களைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கைள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொது மக்களில் சிலர் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

நடந்து சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உழவர் சந்தை வியாபாரிகள், சந்தைக்கு வந்திருந்த பொதுமக்கள், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, வியாபாரிகள் மற்றும் உழவர் சந்தைக்கு வந்திருந்த பொது மக்களில், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் இளம் பெண்கள், இளைஞர்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மகளிர் உதவித்தொகை: உழவர் சந்தையில், சாலை ஓரத்தில் கடைவைத்து காய்கறி விற்பனை செய்து வரும் விஜயா என்பவர், முதல்வரிடம் தனக்கு மகளிர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், “உரிய காரணமின்றி, தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்காது”என்று பதில் கூறினார்.

“எனது கணவர் அரசு பணியாளர் அதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் (கணவர்) சாப்பிட்டால் மட்டும் போதுமா எனக்கு வயிறு நிறைந்து விடுமா?” என முதலமைச்சரிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குமாரவலசு பகுதியில் உள்ள, மறைந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தியின், வீட்டுக்குச் சென்றார். கணேசமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x